10-வது இருதரப்பு ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையின் பல்வேறு இடங்களில் ஐ.டி.பி.ஐ. வங்கியானது 9 கிளைகளை நிறுவி, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது இருதரப்பு ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று (அக்.,24) முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, பாலசுந்தரம் சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்பு ஊழியர்கள் 30 பேர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், அனைத்து வங்கிகளிலும் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் முதல் 10-வது இருதரப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கி அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நிதியாண்டின் முடிவில், ரூ.5,158 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.25,205 கோடியாகும். இவ்வாறு அவர் கூறினார்.