மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட மக்களை வஞ்சித்து வரும் திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தமிழக எதிர்க் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக அமல்படுத்தும் திட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கேரளாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பங்கேற்று விட்டு நேற்று கோவைக்கு வந்தார்.
அவரை தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்தார். அப்போது முரளிதரராவ், கிருஷ்ணசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பிற அரசியல் கட்சியினரிடையே பரபரப்பையும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எந்த ஒரு அறிவிப்போ, நிகழ்வோ நடந்தால் அதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பதை வழக்கமாக கொண்டுள்ள கிருஷ்ணசாமி, தற்போது பாஜக தமிழக பொறுப்பாளரை சந்தித்த சம்பவம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்காமல் இருப்பது அரசியல் கட்சியினரிடையே புதிய தமிழகம் கட்சி பாஜகவில் இணைந்து விட்டதா? அல்லது அக்கட்சி முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டு கிருஷ்ணசாமி பாஜக-வில் இணைந்துவிட்டாரா ? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.