கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக கோவை மண்டல இரு சக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் அனைவரையும் இணைப்பது மகிழ்ச்சி. கோவையில் இரு சக்கர வாகன உதவியுடன் பல குற்றங்கள் நடைபெறுகிறது.

முறைகேடான வாகன மாற்றங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த குற்றங்களை யாரிடம் கூறுவது என்பது போன்ற தயக்கம் இனி வேண்டாம். உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்.
செயின் பறிப்பு தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் கொடுக்கலாம்.

நீங்கள் அனைவரும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் இணைந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அங்கீகாரத்தை உங்களுக்கு பாதுகாப்பாக உபயோகித்து குற்றவாளியாக மாறிவிட வேண்டாம். நீங்கள் தவறு செய்தால் காவல்துறையால் அதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பெருமாள் பேசினார்.