கோவை மாவட்டம் சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரியில் வரும் அக்டோபர் 14ம் தேதியன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், கோவை, சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரி ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்டோபர் 14 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை, சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரியல் நடைபெற உள்ளது.
இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, ஓட்டுநர், டெய்லர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு வரை பயின்ற ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விசான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு இல்லை. இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.
இதில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல், திறன் பயிற்சிக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மாணவ, மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.