கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் இருவர் பலியான சம்பவம் டெங்கு குறித்தான அரசின் நடவடிக்கை மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முக்தி முண்டா (18). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவைக்கு மில் வேலைக்காக வந்தார்.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் கூலி வேலை செய்து வந்த அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முக்தி முண்டா-விற்கு மஞ்சள் காமாலை இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே முக்தி முண்டா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, சிறுமுகை இரும்புப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான காவேரி (25) கடந்த 10 நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.
கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து டெங்கு குறித்தான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்து வரும் நிலையில், தொடர்ந்து கோவையில் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அரசு நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.