கோவையில் தனியார் விளையாட்டு மையமான விஷன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி-யின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-
"எந்த விளையாட்டாக இருந்தாலும் அடிப்படையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். அப்போதுதான் திறமையை வெளிப்படுத்த முடியும். தொடர்ந்து பயிற்சி பெறுவதன் மூலமே வெற்றியை அடைய முடியும்.
நான் தொடர்ந்து பயிற்சி எடுத்ததன் காரணமாகவே வெற்றி பெற முடிந்தது. பல்வேறு நாட்டு வீரர்களுடன் விளையாடும் போது அவர்களின் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் புதிய அனுபவங்களும் ஏற்படுகிறது.
விளையாட்டுத் துறையில் குழந்தைகளின் பங்களிப்பை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவிற்காக விளையாடும் போது நான் வெற்றி பெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற நிலை மாறி உள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இறகு பந்து போட்டியிலும் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்துகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று.
அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டின் மீதான ஆர்வத்தை திறன் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் வெளிக்கொணர்ந்து சர்வதேச போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும். கோவை போன்ற பகுதிகளில் இதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது" என்றார்.
தொடர்ந்து, இந்தியா போன்ற பெரிய நாட்டில் குறிப்பிட்ட சில வீர்ரகள் மட்டுமே சாதிக்க முடிகின்றது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "தற்போதைய நிலையில் புதிய இளம் வீரர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றனர்" என்றார்.