புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மோதல் இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை என புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பல்கலைக் கழக அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பல்கலைக் கழகம் துவக்க விழா கோவையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பல்கலைக் கழக வேந்தர் சுப்பிரமணியன் கூறியதாவது:-
உள்ளாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் கிளை கோவையில் துவங்கப்படுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுச்சேரி வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி அரசின் மீது துணை நிலை ஆளுநரின் தலையீடு எங்களுக்கு நெருடளாக உள்ளது. இதற்கு முன் இருந்த ஆளுநர்கள் இது போன்று இல்லை. சில கோப்புகளில் கையெழுத்திடுவதில் ஆளுநர் தாமதப்படுத்துகிறார்.

ஆளுநர் சொல்வது போல புதுவையில் டெங்கு தீவிரமாக பரவவில்லை. டெங்கு பரவுவது கட்டுக்குள் உள்ளது. டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய கமிட்டி ஒன்றை முதலமைச்சர் நாராயணசாமி அமைத்துள்ளார்.
இவ்வாறு புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.