கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினமான இன்று மூட உத்தரவிடப்பட்டது.
விதிமுறைகளுக்கு முரணாக இன்று மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரித்திருந்தார். ஆனால், கோவையின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் இன்று வெளிப்படையாகவே மது விற்பனை நடப்பதை பார்க்க முடிகிறது.
மேட்டுப்பாளையம் சாலையின் அருகில் அமைந்துள்ள சங்கனூர் சாலை, கண்ணப்பன் நகரில் நான்கு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இந்த கடைகள் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. குறிப்பாக சாதாரண நாட்களில் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இன்று காந்தி ஜெயந்தி தினத்தின் சிறப்பு விற்பனையாக காலை 9 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை நடந்துவருவதாக அங்குள்ள பொதுமக்கள் புகாரளித்தனர்.
மேலும், இவர்களை தண்டிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், காலையிலேயே வந்து மாமூல் வாங்கிவிட்டு, மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தனர்.
விசாரித்ததில், அரசு நிர்ணய விலையை விட அதிக விலையில் இன்று மது பாட்டில்கள் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
அரசு உத்தரவை மதிக்காத டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீதும், அவர்களுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் படி சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா ?