எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை உடனடியாக பதவி விலக கோரி, வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதி மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில், செய்தியாளர்களிடம் பேசியவர் இதனை தெரிவித்தார். மக்கள் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுகளை இழந்து மைனாரிட்டி அரசாக ஆட்சி நீடித்து வருவதாக குற்றம்சாட்டினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்தியில் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக செயல்படக்கூடாது எனவும், புதிய ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்டுவதுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென முத்தரசன் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணம் செலவழிக்கப்பட்டு அரசியல் பேசுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது எனவும், நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறக்க முதலமைச்சர் செல்வதை யாரோ தடுப்பதால் அந்நிகழ்ச்சிக்கு அவர் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் ஒரு நாடகம் எனவும், கண் துடைப்புக்காக நடத்தப்படும் இந்த விசாரணையால் எந்த பலனும் இல்லை என கூறிய அவர், அவரது மரணம் தொடர்பாக உண்மை வெளிவர வேண்டுமெனில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், தமிழக பொறுப்பு ஆளுநர், லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டுமென கூறியவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.