கோவை மாநகராட்சியில் உபயோக மாற்றம் செய்யப்பட்ட கட்டிடங்கள், விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் விதிகளின்படி கட்டிடத்தின் முழு பரப்பளவிற்கு வரிவிதிப்பு செய்யப்படாத இனங்களுக்கு விதிகளின்படி சொத்துவரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதைத் தவிர சொத்துவரி உயர்வு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சொத்துவரி உயர்வு என தவறுதலாக சித்தரிக்கப்படுவதை நம்பவேண்டாம் எனவும் கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகராட்சியில் ரூ.159.85 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 2-ம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முழுமையாக முடிக்கப்பெற்று மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் மாமன்ற தீர்மானங்களின் படி திருத்திய குடிநீர் கட்டணம், கூடுதல் வைப்புத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய குடிநீர் விநியோக துணை விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருத்தப்பட்ட வைப்புத் தொகைகள் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கட்டணங்கள் வசூலிக்கப்படாத காரணத்தினால் தணிக்கை தடை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில் ஏற்கனவே வசூல்செய்யப்பட்டு வரும் வைப்புத்தொகை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விகிதத்தில் உள்ளதால் இப்பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புதாரர்கள் இத்தொகையினை செலுத்த தேவையில்லை.
மேலும், 01.10.2013-க்குப் பின்னர் பெற்றுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு புதிய விகிதத்தில் வைப்புத்தொகைகள் வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
ஆகவே, 01.10.2013-க்கு முன்னர் உள்ள இணைப்புகளுக்கு மட்டும் திருத்தப்பட்ட வைப்புத்தொகை செலுத்தக் கோரி அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்கள் திருத்தப்பட்ட வைப்புத் தொகையினை மாநகராட்சிக்கு தவறாமல் செலுத்தி, மாநகராட்சியின் குடிநீர் வளர்ச்சி திட்டங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.