நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் துணைத்தலைவர் ஜேம்ஸ் ராமு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக கார் மூலம் கோவை விமான நிலையம் வந்து கொண்டிருந்தார். அவரை வழி அனுப்பி வைப்பதற்காக கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கந்தசாமி உள்பட 4 பேர் உடன் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த கார், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து (TN 33 N 2902), காரின் மீது வேகமாக மோதியது. இதில், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கந்தசாமி, ஜேம்ஸ் ராமு, கதிர்வேல் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஓட்டுநருக்கு அவினாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் கந்தசாமி, ஜேம்ஸ் ராமு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் கூடிய தெக்களூர் பகுதி மக்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், வேகத்தடை மற்றும் அபாய பாதாகைகளை அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என போலீஸாரிடம் அவர்கள் முறையிட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
