கோவை துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் வழக்கம் போல இன்று வாடகை காரில் பள்ளிக்கு சென்றனர். கார் ஓட்டுனர் பள்ளி வாயிலில் சிறுமிகளை இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது.

ஆனால், இரு சிறுமிகளும் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாயமான சிறுமி பள்ளி சீறுடையை தவிர மாற்று உடையும் கொண்டு வந்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, சிறுமிகள் இருவரும் பள்ளிக்கு விடுமுறை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் அருகில் உள்ள வணிக வளாகங்களில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், மாயமான சிறுமிகளின் பெற்றோர், பள்ளிக்கு சென்று சிறுமி மாயமானது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், தங்கள் குழந்தைகள் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி பள்ளி வாயில் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கு சென்ற இரு சிறுமிகள் மாயமான சம்பவம் கோவையில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.