சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் ஊழல் இருப்பதாக பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் சோமனூர் பேருந்து நிலைய விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககன் சிங் பேடி தலைமையில் தனி நபர் விசாரணை குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில், இது போன்ற சம்பவங்கள் வரும் காலகட்டத்தில் நடைபெறாமல் இருக்க ககன்சிங் பேடி கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 15) விசாரணையினை துவங்கினார்.
முன்னதாக, இன்று காலை கோவை வந்த ககன் சிங் பேடி, விபத்து நடந்த சோமனூர் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவினருடன் ஆய்வினைத் தொடங்கினார்.
இடிந்து விழுந்த பேருந்து நிலைய மேற்கூரையின் மீதுள்ள இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட்-ன் நிலைப்பு தன்மையினை ககன்சிங் பேடி ஆய்வு செய்து வருகிறார். உடன் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்றுள்ளார்.

ஆய்வு முடிந்த பின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.