கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கோவை ஆர்.எஸ் புரம் 23வது வார்டு பகுதிக்குட்பட்ட கெளலிபிரவுன் சாலை முதல் ராமலிங்கம் சாலை வரை மொத்தம் 15 வீதிகளில், 14.09.2017 (இன்று) முதல் 'ஒன் சைடு பார்க்கிங்' முறை அமல்படுத்தப்படுகிறது.

இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று தொடக்கி வைத்தார். பின்னர், இதுகுறித்து அவர் கூறுகையில், "வாகன கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த 23-வது வார்டு பகுதியில் 'ஒன் சைடு பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தி கொடுத்த வெல்ஃபேர் அசோசியேஷன்-க்கு நன்றி. இந்த 'ஒன் சைடு பார்க்கிங்' வசதியினை இங்கு வசிக்கும் பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மாதம் ஒரு பகுதி, என மாதம் ஒரு முறை 'ஒன் சைடு பார்க்கிங்' முறை மாற்றி அமைக்கப்படும்".

மேலும் இதுபற்றி கூறுகையில், "23வது வார்டு குடியிருப்பு மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க 'ஒன் சைடு பார்க்கிங்' அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை இப்பகுதி மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். வீதிகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
திருட்டு மற்றும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, மக்கள் அவரவர் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் சிசிடிவி காமேராக்களை பொறுத்திட வேண்டும், என்று காவல் ஆணையர் அமல்ராஜ் வலியுறுத்தினர்.
