கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அங்கு குடியிருப்போருக்கு மாற்று வீடுகளை ஒதுக்கி நீர்நிலைகளை மீட்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு அறிவித்தது. அதனடிப்படையில், கோவை போத்தனூர் அருகே உள்ள அணைமேடு, முத்துகாலனி, சேரன் நகர், அண்ணா காலனி, உக்கடம், பெரியகுளம், தெற்கு கரை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக நடந்த நடவடிக்கையின் மூலம் 1000-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதனால், கோயம்புத்தூர் மாநகராட்சியும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது.
இந்நிலையில், கோவையில் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு :-

சிங்காநல்லூர் குளம் மற்றும் வாய்க்காலில் சுமார் 1500 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. பேரூர் பெரிய குளத்தில் விவசாய நிலங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. செல்வம்பதி குளம் மற்றும் குமாரசாமி குளத்தில் சுமார் 3500 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு நுகர்வோர் தானியக் கிடங்கு,விவசாய பல்கலைக்கழகம் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.கோயமுத்தூர் அணைக்கட்டு எனும் தேவிசிறை தடுப்பணை நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 530 அடி அகலம் கொண்ட அணையானது 150 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செங்குளம் விவசாய நிலங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.


போத்தனூர் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ராஜவாய்க்கால் மீட்கப்படுவதைப் போல, மேற்கண்ட ஆக்கிரமிப்பு நீர்நிலைகளும் மாநகராட்சியால் மீட்டெடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.