ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏர்செல் நிறுவனத்தில் ரூ.4 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலைக் கடந்த 2005 ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் கோரியிருந்தது. ஆனால், இந்த வாரியத்துக்கு தலைவராக இருந்த அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம், மேக்சிஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக, ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்பட்டது.
மேக்சிஸ் நிறுவனத்தின் ஒப்புதல் நிலுவையில் இருந்த நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலைக்குக் கைமாறின. அதன் பின் கடந்த 2006 ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் பங்குகளும் பெருந்தொகைக்கு விற்பனையாயின. இப்படியாகக் கடைசி நேரத்தில் ஏர்செல் பங்குகள் குறைந்த விலைக்குக் கைமாறியதே ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு சொந்தமான சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு என்று அப்போதே சில செய்திகள் கசிந்தன.
இவ்வழக்கின் திடீர் திருப்பமாக, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் ஆதாயமடைந்தது தொடர்பான விசாரணைக்கு வருமாறு கார்த்திக் சிதம்பரம் மீதும் இந்த வழக்கு திரும்பியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்திக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக நாளை (14.09.2017) ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வாங்கி கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.