தனது தொடர் சாதனைகளுக்காக இங்கிலாந்து ராணியிடம் கோவையை சேர்ந்த சிறுமி வாழ்த்து பெற்றுள்ளார் கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி தர்ஷினி. கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், இவரது மகள் தர்ஷினி, கணுவாய் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஸ்கேட்டிங் விளையாட்டில் பலே கில்லாடியான இவர் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

மேலும், 41 நிமிடங்களில் 10.5 கி.மீ தூரம் ஸ்கேட்டிங் செய்து "ஆசியா சாதனையாளர்கள் புத்தகம்"(Asia book of records) புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இந்த சாதனையை தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான ‘பிரைட் ஆப் தமிழ்நாடு’ விருதினை பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பது இந்த சாதனைச் சுட்டியின் எதிர்கால லட்சியமாக உள்ளது.
தர்ஷினியின் சாதனைகளை செய்தித்தொகுப்பாக சிம்ப்ளிசிட்டி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தனது சாதனைகளை ஒரு கடிதம் மூலம் இங்கிலாந்து மகாராணிக்கு அனுப்பியுள்ளார் தர்ஷினி.

இதைப்பார்த்த ராணி, தர்ஷினியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தனது கையொப்பமிட்டதுடன் தனது இரு புகைப்படங்களையும் தர்ஷினிக்கு பரிசாக அனுப்பியுள்ளார்.

