கோவை கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன்- யோகேஷ்வரி தம்பதியினர். இவர்களது மூன்றாவது மகன் அனீஷ். கிட்டாம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவர் அனீஷ், இன்று ஆர்.ஜி.புதூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது சாலை வளைவில் திரும்பியுள்ளார். அப்போது கோவையில் இருந்து அவிநாசி நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி மோதி விபத்திற்குள்ளானார். இந்த விபத்தில் அனீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவன் வாகன விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.