கோவை மாநகராட்சியில் புதியதாக விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் கண்டித்து சரவணம்பட்டி பகுதி திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காலிக் குடங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தும், புதிதாக வதிக்கப்பட்டுள்ள வரி உயர்வைக் கண்டித்தும் சரவணம்பட்டி திமுக பகுதி கழகம் சார்பில், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய வரி சீராய்வு என்ற பெயரில் குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்ட புதிய வரிகள் விதிப்பைக் கண்டித்தும், தெருவிளக்குகள் எரியாதது, குப்பைகள் அகற்றப்படாதது, அதிகாரிகளின் அலட்சிய போக்காலும், மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது, சுகாதார சீர்கேடு, பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து மாநகர தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் கூறுகையில், மாநகராட்சியின் 100 வார்டுகளிலும், புதிய வரி சீராய்வு என்ற பெயரில் குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பல ஆயிரக்கணக்கான டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. குடிநீர் சீராக விநியோகிப்பதில்லை. எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. அதிமுக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களின் வேலைகளை பார்ப்பதில்லை, இந்த புதிய வரிகளை வாபஸ் வாங்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார்.