நீட்தேர்விற்கு விலக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வெள்ளளூரில் போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சிபிஎம் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரின் இந்த அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை, வெள்ளளூர் அரசுப்பள்ளி மாணவிகள் திங்களன்று காலாண்டு தேர்வை புறக்கணித்து அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தியும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவலை கேள்விப்பட்டு சிபிஎம் கோவை மாவட்டக்குழு உறுப்பினரும் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினருமான வீரமணி, சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு, கடும் வெயிலில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவிகளுக்கு தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் காவல்துறையினர் வீரமணி உள்ளிட்ட மூன்றுபேரை போராட்டத்தை தூண்டியதாக கூறி கைது செய்தனர். காவல்துறையினரின் இந்த அடக்குமுறையை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
உச்சநீதிமன்றமே எவ்வித பாதிப்பும் இல்லாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளித்துள்ளது. தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகத்திற்கு துரோகம் இழைத்திட்ட மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கையின் நியாயம் உணர்ந்து அதனை தீர்ப்பதற்கு பதிலாக தமிழக அரசு அடக்குமுறையை ஏவிவிடுவது ஏற்புடையது அல்ல. மேலும், முதலமைச்சராய் ஜெயலலிதா இருந்தபோது சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்காவின் தீர்ப்பையடுத்து கோவை மாநகரமே ஸ்தம்பிக்கிற வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆளும் கட்சியே கட்டவிழ்த்தபோது இந்த காவல்துறையினர் ஒரு வழக்கு கூட பதிவு செய்யாமல் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதாக உள்ளது.
இந்நிலையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் போராடுபவர்களை மிரட்டுவதும், அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கும் காவல்துறையினரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அடக்குமுறையால் ஒருபோதும் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என்பதை எச்சரிக்க விரும்புகிறோம். காவல்துறை உடனடியாக பொய்வழக்கை திரும்பப்பெற்று கைது செய்த வீரமணி உள்ளிட்ட மூன்றுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.