கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால் நகர் முழுவதும் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் நீர் வெள்ளம் போல தேங்கிக் கிடக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மழை காலங்களில் நகரின் மையப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், புறநகர் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு சென்று சேர முடியாததே காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், சமூக விரோதிகள் சிலர், உக்கடம் - சுங்கம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலம் அருகே வாலாங்குளத்தில், செயற்கையாக மணல் திட்டுக்களை அமைத்தது தெரிய வந்தது. குளத்தின் மேற்கு பகுதியில், நீர் வரும் இடத்தில் 50-க்கும் மேற்பட்ட மணல் திட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வாலாங்குளத்தில் மீன்பிடிக்க வரும் மீனவர்கள், மீன்களை கழுவுவதற்கு ஏதுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாலாங்குளத்தில் அடைப்பு ஏற்பட்டிருப்பது குறித்து நமது சிம்பிளிசிட்டி (SimpliCity) செய்தி வெளியிட்டது. இதையறிந்த நகராட்சி ஆணையரும், சிறப்பு அதிகாரியுமான கே.விஜயகார்த்திகேயன், வாலாங்குளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து, நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மீனவர்களின் உதவியுடன் மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தினர். இதனால், குளத்திற்கு செல்லும் மழை நீர் தடையின்றி சென்றது.

மேலும், குளத்திற்கு மழை நீர் செல்வதை, தடுக்கும் பொருட்டு செயல்படும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
நீண்ட நாட்களாக கண்டுகொள்ளப்படாத நிலையில் கிடந்த இந்தப் பிரச்சனையை, நகராட்சி அதிகாரிகளால் சீர் செய்ய உறுதுணையாக இருந்த சிம்பிளிசிட்டியின் (SimpliCity) செய்தி நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.