தமிழகத்தில் எந்த சம்பவத்தை வைத்து வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்பது மாணவி அனிதா மரணத்தின் வழியே மக்களுக்கள் ஆணித்தனமாக அறிந்திருப்பர். அவ்வாறு டாஸ்மாக் கடைகள் இல்லாத தமிழகம் வேண்டும் என்ற மக்கள் சிந்தனையும், போராட்டங்களும் அரசியலாக்கப்பட்டது.
பல்வேறு கட்சிகள் நடத்திய போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் பின்னர், கடந்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதி முதல் மது விற்பனை செய்யப்படும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையாக குறைத்து அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
கோவை:
கோவை மண்டலத்தில் மட்டும் 60 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் 3,316 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. கோவை மாவட்டத்தில் இருந்த 284 மதுபான கடைகளில் 154 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. வருவாயை பெருக்க மாற்று வழியை யோசித்துக் கொண்டிருந்த தமிழக அரசு, அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு, மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மக்கள் போராட்டம்:
தமிழக அரசின் இந்த நடவடிக்கை, அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது. பல்வேறு இடங்களில் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் முன்புறம் முற்றுகை போராட்டம் நடத்தினர் தமிழக மக்கள்.
பொறுமையை இழந்த பொதுமக்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதன் சிறந்த உதாரணமாக, கடந்த சில மாதங்ககுக்கு முன்பு, கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே இருந்த டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. டாஸ்மாக் கடையில் இருந்த மதுபாட்டில்களை எடுத்து வந்த பொதுமக்கள் அவற்றை சாலைகளில் போட்டு உடைத்தனர். இதன், தாக்கம் சுற்றுவட்டார பகுதியான புலியகுளம் பகுதிக்கும் பரவியது.
கடந்த வாரம் (செப்.,3) புலியகுளம் பகுதியில் புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடைகளை பொது மக்கள் அடித்து உடைத்தனர். இதில், அப்பகுதியை சேர்ந்த 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படடவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்னும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன.
இந்த நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இளைஞர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். மாணவர்கள் கல்லூரி வகுப்பை புறக்கணித்தும் போராட்டங்களை நடத்த துவங்கினர். இதனால், டாஸ்மாக் போராட்டங்கள் சற்றே மறந்தது. இச்சூழலில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
டாஸ்மாக்கிற்கு எதிராக ஆர்பாட்டங்கள், போராட்டங்களையும் கடந்து, ஒரு படி மேலாக, வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வரும் வேளையில், அரசு மீண்டும் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க முற்படுவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால், கோவையில் நடைபெற்ற டாஸ்மாக் சூரசம்ஹார சம்பவங்கள், தமிழகம் முழுவதும் அரங்கேறுவது சாத்தியமே.!