கோவை மாவட்டம் போத்தனூர் - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில்பாதை பணிகள் முடிந்து நான்கு மாதங்களாகியும், நாள்தோறும் ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இவ்வழியாக இயக்கப்படுகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது, தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததற்கு, ரயில்பெட்டிகள் இல்லை என மத்திய அரசு கூறுவது மானக்கெடு எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.