கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- சுற்றுச் சூழலின் முழு சுகாதாரம் தூய்மை செய்தல், புகைபோக்கி கருவி மூலம் கொசு மருந்து அடித்தல், குடிநீரை குளோரினேசன் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கலாம்.
அனைத்து துறை அரசு வளாகங்களையும் தூய்மைப்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தங்களது ஊராட்சிகளுக்கு உட்பட்டுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் தூய்மையாக உள்ளது என்று உறுதி செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையின் கீழ் மண்டல அலுவலர்கள் மற்றும் குழு அமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களையும் கண்காணித்திட வேண்டும்.
மாவட்ட அளவிலான குழுவின் மூலம் டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்டால் அதன் பொறுப்பு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிலையான இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் காய்ச்சல் பரவாமல் தடுக்கமுடியும். மேலும் காய்ச்சலை தடுப்பூசி மூலமாகவோ ஆன்டிபையாடிக் மூலமாகவோ தடுக்க இயலாது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாகவே காய்ச்சலை தடுக்க முடியும்.
எனவே மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களும் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் மஸ்தூர்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்கூட்டியே ஒருவாரத்திற்கான முன்பயண திட்டங்களை தயாரித்து அதன்படி செயல்படவேண்டும். அதில் மஸ்தூர்கள், சுகாதார ஆய்வாளர், வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர்களை ஈடுபடுத்தி முன்பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயலாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் அவர்களது பணியினை உணர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
குடிநீரை சேகரித்து வைப்பதன் மூலம் லார்வா புழுக்கள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுகிறது. எனவே குடிநீரை சரியான நேரத்தில் விநியோகம் செய்து தேக்கி வைப்பதை தடுப்பதன் மூலமும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.
மேலும், சுகாதாரத் துறை விரைவான குழுக்கள் அமைக்கப்பட்டு வட்டார அளவில் கண்காணிக்கப்பட வேண்டும். அக்குழுவானது ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் மாலை தலைமை அலுவலர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இவ்வாறு சுழற்சி முறையில் 6 நாட்களும் வட்டாரங்களில் பணிகள் மேற்கொள்வதன் மூலம் காய்ச்சலை தடுக்க முடியும். மேலும், அக்குழுக்கள் புகைபோக்கும் கருவியின் மூலம் கொசு மருந்து அடித்து கொசுவை ஒழித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சுகாதாரத் துறையுடன் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை அணி திரட்டி இணைந்து செயல்பட வேண்டும். சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களும் சேர்ந்து செயல்படவேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வணிகவரித்துறை இணை ஆணையர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, அம்ரித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், உதவி (பயிற்சி) ஆட்சியர் சரண்யா ஹரி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பானுமதி, வருவாய் கோட்டாச்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி, உதவி இயக்குநர்கள் பத்மாவதி (ஊராட்சிகள்), கணேஷ்ராம் (பேரூராட்சிகள்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.