சேலம் மாவட்டம், அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கே.பாபு (53). இவர் அதேபகுதியில் சுகாதாரத் துறை மேற்பார்வையாளராக பணியாற்றிவந்தார்.
இந்நிலையில், கடந்த 29.06.2017 அன்று இரவு பணியினை முடித்துவிட்டு மல்லிஅக்கறையில் இருந்து அரிசிப்பாளையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது மல்லிஅக்கறை அருகே வந்த ஒரு வாகனம் வேகமாக மோதியதில் கே.பாபு தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.
தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பல நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் ஸ்ரீதர், தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை கே.ஜி. மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய கே.பாபு குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறினார்.