அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ஆம் வகுப்பில் 1,176 மதிப்பெண் பெற்றிருந்தார். இவரது மருத்துவ கட்ஆப் 196.75 ஆக இருந்தது. எனினும் நீட் தேர்வில் இவரால் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றதால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனிதா தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில், மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கோவை ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- மத்திய அரசு சட்டத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற மெத்தனப்போக்கில் உள்ளது. கழிப்பிட வசதி கூட இல்லாத கிராமங்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உள்ள தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராவது சாதியமில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு சிதைத்து வருகிறது. அதற்கு உதாரணமே அனிதா-வின் தற்கொலை.
இந்த தேர்வை ரத்து செய்யவில்லை என்றால், தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.