கோவை மாவட்டம், சிட்கோ அருகே அமைந்துள்ள இந்தியன் தபால் நிலையம் பகுதியில் புதர்களால் இயற்கைக்கு கேடுஏற்படுத்தி வந்த 25 சென்ட் நிலப்பரப்பில் தற்போது இந்தியன் தபால் நிலையத்தின் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

கோவை, சிட்கோ அருகே தொழில் பேட்டை மற்றும் இந்தியன் தபால் நிலைய அலுவலகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் முற்புதற்கள் மற்றும் இதர கழிவுகளால் நிலம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை, கோ கிளீன் மற்றும் கிரீன் பேஸ் II ஆகியவை இணைந்து குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூலம் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, இப்பகுதியில் சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாக வகையிலான மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டது.

அதன்படி, கோவை தபால் நிலைய தெற்கு துணைப் பிரிவு ஆய்வாலர் ஏ.என்.சாந்தினி பேகம் தலைமையிலான குழுவினர், மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்ட்டர் ஜெனரல் சாரதா சம்பத், தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை நடவுசெய்தனர்.

இதுகுறித்து கோவை தபால் நிலைய தெற்கு துணைப் பிரிவு ஆய்வாலர் ஏ.என்.சாந்தினி பேகம் கூறுகையில், "கருவேலமரங்கள் உள்ளிட்டவற்றால் இயற்கைக்கு கேடுவிளைவிக்கும் வகையில் காணப்பட்ட இப்பகுதியினை சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் மாற்ற திட்டமிட்டோம். அதன்படி, தற்போது 25 சென்ட் அளவுகொண்ட இடம் தூய்மைபடுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை இயற்கை சூழலுக்கு உகந்ததாக இருக்கும்" என்றார்.