கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்த கன மழை, கோவை மண்ணை மட்டுமல்லாது, மக்களின் மனதையும் குளிர்வித்தது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி சராசரி மழை அளவாக 3 செ.மீ மழை பதிவானது. தொடர்ந்து, மழையின் அளவு படிப்படியாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 9.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இப்படி, தொடர்ந்து பெய்த கனமழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதில் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஆனால், தேங்கிய மழை நீர் சிறிது நேரத்திலேயே வடிந்தோடியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவையின் மிக முக்கிய பகுதியாக லங்கா கார்னர் உள்ளது. இந்த பகுதியில் இருப்பு பாதை அமைந்துள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மழை நீர் தேங்கி வந்தது. மழை பெய்து முடித்த 2 நாட்களுக்கு மழை நீர் வடியாமல் அப்படியே நிற்கும். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்று வந்தனர்.
பல ஆண்டுகளாக இந்த பிரச்னைக்கு தீர்வை தேடி பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்து வந்தனர். தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகராட்சி நிர்வாகம் லங்கா கார்னர் மேம்பால பகுதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது.
அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், அதிக அளவில் மழை பதிவான போதும் அப்பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கவில்லை. இதனால். அந்த மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதே போல, கிக்காணி பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும், அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியிலும் மழை நீர் தேங்கி நிற்கவில்லை. பெய்த மழை நீர் உடனடியாக வடிந்து கால்வாய்க்குள் சென்றது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திலிருந்து விடுபட்டதோடு, அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மழை நீர் தேங்கி நிற்காவிட்டாலும், நீரால் அடித்து வரப்பட்ட மண் மற்றும் குப்பைகள் தேங்கி சேறும், சகதியுமாய் நிற்கின்றது.

இதனால், அப்பகுதியில் வாகனம் ஓட்டி செல்பவர்கள், சகதியில் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கும் உரிய தீர்வு எடுத்து, சகதியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அவினாசிலிங்கம் கல்லூரியை ஓட்டியுள்ள பகுதிகளில் பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. உடனடியாக அதிகாரிகள் பள்ளங்களை மூடவும், தேங்கியுள்ள நீர்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டால் கல்லூரிக்கு சென்று வரும் மாணவிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.