நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட சமூக நீதிகளுக்கான வழக்கறிஞர் குழுவினர், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு ஆதரவாக, கண்ணில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு பேரணி நடத்தினர். செஞ்சிலுவை சங்கத்தை நோக்கி நடத்தப்பட்ட இந்த பேரணியின் போது, நீட் தேர்வால் மாணவியின் உயிரை பறித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும், நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வு மட்டுமே காரணமா என தெரியவில்லை என்று கூறிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இந்த பேரணியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மருத்துவரான அவர், மருத்துவ மாணவர்களுக்கு எதிராக செயல்படுவது போல, தனது கருத்தை தெரிவிக்கலாமா..? எனவும் சமூக நீதிகளுக்கான வழக்கறிஞர் குழுவினர் கேள்வி எழுப்பினர்.
