இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் ரமலானுக்கு அடுத்து கொண்டாடும் இரண்டாவது பெருநாள் பக்ரீத் பண்டிகையாகும்.
நபிகள் நாயகத்துக்கு முந்தைய இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் அவர்கள் தவமிருந்து பெற்ற தன் குழந்தையை இறை கட்டளையின்படி பலியிட துணிந்த தியாகத்தை நினைவுகூர்ந்திடும் வகையில்தான் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இறையச்சம் இருந்தால்தான் இறையின் கட்டளைகளை நிறைவேற்ற இயலும் என்பதை உணர்த்தும் வகையில், இறைவனுக்குப் பிள்ளையைப் பலியிடும் மாபெரும் தியாகத்தைச் செய்ய இறைதூதர் இப்ராஹிம் துணிந்தார். ஆனால், இதனைத் தடுத்த இறைவன், ஆட்டை பலியிட செய்தார் என்றும், அதனடிப்படையில் காலம் காலமாக இஸ்லாமியர்கள் நினைவுகூர்வதே இப்பண்டிகையாகும்.

'ஈதுல் அழ்ஹா' என்னும் தியாகப் பெருநாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறையின் பெயரால் அறுத்து பலியிட்டு இறைச்சியை அனைவரும் பகிர்ந்துண்ணும் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளை, முன்னிட்டு, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகளில், இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தி இறைவனை வழிபட்டனர். மேலும். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் கூறிக் கொண்டனர்.