ஒய்என்ஜிசி, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக சிறையில் இருக்கும் அவர் தற்போது ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிப்பு மற்றும் பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி சிறையிலும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி வளர்மதி விடுத்துள்ள நிபந்தனைகள்:-
நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளை அழித்து வரும் நாசகர திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களை உடனே கைவிட வேண்டும்.
சிறையில் தன்னை பார்க்க வருபவர்களை உளவுத்துறை தொடர்ச்சியாக மிரட்டி வருகின்றனர். இதற்கு காரணமான உளவுத்துறை மற்றும் அவர்களுக்கு சட்ட விரோதமாக தகவல்களை அளித்து வரும் சிறைத்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
தன்மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எந்தவித நிபந்தனையின்றி உடனே திரும்பப் பெற வேண்டும். சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளான வாய்தாவிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதை திட்டமிட்டே நிராகரித்து வருகின்றனர். வெளியே அனுப்பும் கடிதங்களை சென்றடையாமல் தடுத்து வருகின்றனர். இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது துறைநீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.