அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் உட்கட்சி தகராறு அதில் தலையிட முடியாது என கவர்னர் சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவில் உள்ள 19 எம்.எல்.ஏக்களும் தனி தனியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர் எனவும், ஒ.பி.எஸ் தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் வெளியேறிய போது மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என தெரிவித்த ஆளுநர் தற்போதைய சூழ்நிலையில் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் இது உட்கட்சி தகராறு தலையிட முடியாது என சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என தெரிவித்தார்.
ஆளுநர் மெளனம் சாதிப்பதற்கு உள்நோக்கம் எதுவும் இருக்கின்றதா என்பதை அவரிடம் கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், மத்திய அரசின் தலையீடு இல்லாமல் ஆளுநர் செயல்பட மாட்டார் எனவும் தெரிவித்தார். ஆளுநர் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என தெரிவித்தவர் தனக்கு கவர்னர் மீது இன்னமும் நம்பிக்கை இருப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.