ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
"மாவட்ட செயலாளர் பதவிக்கு முறையாக வந்தவர்கள் நாங்கள். டி.டி.வி.தினகரனுக்கு வந்துள்ள பயத்தால் அமைச்சர்களையும், அதிமுக-வில் பொறுப்பில் உள்ளவர்களையும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார்.
தேர்தல் கமிஷன் அறிவிப்பிக்கு பிறகு தான் கட்சி அதிகாரம் யாருக்கு உள்ளது என்று தெரியவரும். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா குறித்து எதுவும் பேசவில்லை. பொதுவான விஷயங்கள் குறித்துதான் பேசப்பட்டது.
இரட்டை இலையை மீட்கும் நடவடிக்கையில் மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். சின்னம் விரைவில் மீட்கப்படும். எம்எல்ஏக்கள் இடையே பேரம் எதுவும் நடக்கவில்லை. கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோர் தனி அமைப்பு நடத்துவதால் அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். தற்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க மக்களும் தயாராக இல்லை, எம்.எல்.ஏ-க்களும் தயாராக இல்லை. அடிக்கடி வாக்களிக்க யாரும் விரும்பமாட்டார்கள்" என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.