கோவை, ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பயணிகள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தென்காசியிலிருந்து கோவை வந்த தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை, கோவை ஈச்சனாரி நெடுஞ்சாலை கற்பகம் கல்லூரி அருகே வரும் போது, கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து கோவை கருமத்தம்ப்பட்டி நோக்கி வந்த லாரி ஒன்று சொகுசு பேருந்தின் பின் புறத்தில் மோதியதாக தெரிகிறது.
இந்த விபத்தில், சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், ஒரு சில பயணிகள் வெளியே வந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் உட்பட குருவம்மா, பெரியசாமி, வத்சலா, சசிதரன், பாலகுரு, பொன்னுச்சாமி ஆகியோர் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

இதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லின் இயந்திரத்தின் உதவியோடு பேருந்தை மீட்டு, உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். விபத்தில் பலத்த காயமடந்த ஓட்டுநர் மாரியப்பன், பெண் பயணி குருவம்மா மற்றும் லாரி ஓட்டுநர் அருகே உள்ளே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து மதுக்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி, குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாலம் கட்டாததால் தான் அதிகளவு விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.