குழந்தைகள் சிகிச்சையின் இந்திய பேரவையின் 42-வது ஆண்டு விழாவையொட்டி 'கொங்கு பெடிகான் 2017' என்னும் தலைப்பில் கேஎம்சிஎச் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவ பிரிவு சார்பில் பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் விரிவான அவசர கால பிரிவு குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு கேஎம்சிஎச் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல ஜி.பழனிசாமி தொடக்கி வைத்தார். குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர்.ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கோவை முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கலந்து கொண்டார்.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பள்ளி குழந்தைகள் வீடுகளில் இருப்பதை விட பள்ளிக்கூடங்களில் இருப்பது தான் அதிகம். எனவே, அவர்களை நாம் அதிகம் நேசிக்க வேண்டும். பொதுவாக, அனைத்து பள்ளிகளிலும் அவசர உதவிக்கான மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை அறிந்து கொண்டு தேவையானவற்றை பள்ளிகளில் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த மருத்துவ தகவல்களை மற்ற ஆசிரியர்களிடமும் சொல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும்.

மேலும், பள்ளி குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை நாம் அவர்களது பெற்றோர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சில சமயம் பெற்றோர்களுக்கும் தெரியாமல் இருக்கும் போது அதனை பள்ளிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாமில் நாம் தீர்வு காண வேண்டும். மாணவர்களிடத்திலும் நாம் குறைபாடுகளை கண்டறிந்தால் அதனை நிவர்த்தி செய்ய வழிவகுக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் வைத்திருக்கும் மருத்து, மாத்திரைகளை பார்வையிட்டு காலாவதியான மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
மேலும், கேஎம்சிஎச் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு சார்பில் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறும் மருத்துவ ஆலோசனைபடி எந்த நோய்களுக்கு என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொண்டு அதன்படி தீர்வு காண வேண்டும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில், கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் நல்ல ஜி.பழனிசாமி பேசுகையில், குழந்தைகள் நம் எதிர்கால இந்தியாவின் முதுகெலும்புகள் என்பதால், அவர்களுடைய பொதுவான ஆரோக்கியத்தை பராமரிப்பதும் நோய்வாய்பட்டிருக்கும் போது அவர்களை காப்பாற்றுவது மிகவும் முக்கியம் என்றும், இதற்கு பெற்றோர்கள், காப்பாளர்கள் மற்றும் உடல் நல பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்றும், குறிப்பாக அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இந்த கருத்தரங்கில் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், கல்வி முதன்மை அலுவலர் உத்தரவில் கோவையில் அனைத்து பள்ளிகளுக்கும் எங்களது மருத்துவமனையின் குழந்தை நல பிரிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்க உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் கேஎம்சிஎச் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பற்றியும், மருத்துவ ஆலோசனைகள் பற்றியும் பல்வேறு தலைப்புகளில் பேசினார். அதில், ஆஸ்துமா, வாய்புண்கள், ஜீரணக்கோளாறுகள், கண், மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனையும் விளக்கி கூறினார். குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பள்ளித்தளங்களில் ஏற்படும் சாதாரண காயங்களுக்கு முதல் உதவி வழங்குவது குறித்தும் தெளிவுபடுத்தினார்.
