கோவையில் முதல் முறையாக மனிதர்களுக்கு ஆதார் எண் போல மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 3 வண்ணங்களில் 3 வகையான ஒரு லட்சம் மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மனிதர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுவது போல மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளின் விபரங்களை சேகரித்து அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், இதனை கால்நடைகளுக்கான மருத்துவ அட்டையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாடுகளுக்கு 12 இலக்க எண் மற்றும் மாட்டின் இனம், வயது, உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடையாள அட்டையில் இடம் பெறுகின்றன. கோவை மாவட்டத்தில் கால்நடை மருந்தகம், மருத்துவமனை உள்ளிட்ட 105 மையங்களில் இப்பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கலப்பின மாடு, நாட்டின மாடு, எருமை ஆகியவற்றிற்கு 3 வண்ணங்களில் 3 வகையான அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராமசந்திரன் கூறும்போது, கோவை மாவட்டத்தில் ஒரு வருட காலத்திற்குள் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த அட்டை மாடுகளை கண்காணித்தல், மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல், மருத்துவ காப்பீட்டிற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றிக்கு உதவும் என தெரிவித்தார்.
விவசாயி கோவிந்தன் கூறும்போது, மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவை குறித்து மருத்துவர்கள் கண்காணிக்கவும், மருத்துவ வசதிகள் வழங்கவும் இந்த அட்டை பயன்படும். இது வரவேற்கத்தக்கது என்றார்.
மாடுகளை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு கொண்டு வந்த விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாடுகளை கண்காணிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.