கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் புதூரில் ஸ்ரீ முருகன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஒரு சித்த மருத்துவமனை இயங்கி வந்தது. இங்கு மருத்துவம் பயிலாமல் ஒரு பெண்மணி நோயாளிகளுக்கு சிகிக்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது, லதா (63) என்ற பெண் சித்த மருத்துவம் டிப்ளமோ பயின்று விட்டு, ஆங்கில மருத்துவ வழியில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற கோமங்கலம் காவல்துறையினர் லதாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.