நம் தேசத்தின் உயிர்நாடியான நதிகளை காக்கும் விதமாக 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ என்னும் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி உள்ளது.

இதற்கு நாடெங்கும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் கோவை சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று (இன்று) 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரங்கோலிவரைந்தனர்.
இந்த ரங்கோலி சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா பள்ளியில் துவங்கி தேவராயபுரம் கிராமம் வரை சாலையின் இருபுறமும் அமைந்தது. இதில் 8 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நதிகளை காக்கும் இம்முயற்சியில் ஆர்வமுள்ள இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்களை வீடு வீடாக சென்று சந்தித்து, அழிந்து வரும் நம் நதிகளை பற்றியும் அவற்றை மீட்கும் இப்பேரணி பற்றியும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்:-
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பெருக்கெடுத்து ஓடிய நம் நதிகள் இப்போது வற்றிவருகின்றன. ஜீவநதிகளாக கருதப்படும் கங்கை, காவேரி முதலான அணைத்து நதிகளும் வற்றி வருகின்றன. இந்நிலை நீடித்தால் பெரும் நீர் பற்றாக்குறையை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இந்நிலையை மாற்றி நம் தேசத்து நதிகளை மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய அரசு நடவடிக்கையைக் கோரி 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்னும் விழிப்புணர்வுப் பேரணி நிகழவுள்ளது.

வரும் செப்டம்பர் 3ம் தேதி கோவையில் துவங்க உள்ள இப்பேரணி அக்டோபர் 2ம் தேதி புதுடில்லியில் நிறைவுறும். குமரி முதல் இமயம் வரை செல்லும் இந்த பேரணி மூலம் 16 மாநிலங்களில் உள்ள 22 நகரங்களில் பிரச்சாரம் செய்யும் மாபெரும் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதில் 16 மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சிகளின் போது நதிகளின் ஓட்டப்பெருக்கை அதிகரிக்கச் செய்திட பல்துறை வல்லுனர்களால் நுட்பமாக உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்ட அறிக்கை ஒவ்வொரு முதல்வரிடமும் தில்லியில் பிரதமரிடமும் அளிக்கப்படும்.
இந்த திட்டம் பற்றிய விளக்கங்களை rallyforrivers.org என்ற இணையதளத்தில் பெற முடியும்.