கோவை போத்தனூர் - பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் முடிவடைந்து கடந்த ஒருவாரத்திற்கு முன்பு இரயில்கள் சேவை துவங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் போத்தனூர் - பொள்ளாச்சி இரயில் வழித்தடத்தில் செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க இரயில்வே துறை அனுமதி அளித்த நிலையில், இதற்காக பேரூராட்சி நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினரும் 49 லட்ச ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும், உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.