கோவை, ஆலந்துறையை அடுத்துள்ள காருண்யா பல்கலைக்கழகத்தின் இன்று 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பெண்களுக்கு சமமான உரிமையும், மரியாதையும் வழங்கப்பட்டால் மட்டுமே சீரான சமுதாயம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் அவர் பேசுகையில், இளைஞர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், அனைவரையும் சகோதரர்களாக மதிப்பதுடன் இயற்கை வளங்களை காப்பற்றுவதில் கவனம் கொள்ள வேண்டும் என்றார். நமது முன்னோர்களை விட தற்போதைய சமுதாயத்தினருக்கு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் அதனை முழுமையாக இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தவறுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளுதல் அவசியம் என்றார்.
மேலும், நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசனம் மற்றும் அதன் சட்டத்தையும் இளைய சமுதாயம் முழுமையாக கற்றுக்கொள்வதுடன், அதனை சமுதாய மேம்பாட்டிற்கு செயல்படுத்தவும் முன்வர வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் மனித வளமும், தரமும் அதிகரித்து வருவதால் தேடுதல் மூலம் விடா முயற்சியால் வெற்றிப்பெற இளைய சமுதாயத்தினர் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார். இந்திய சாசனம் வழங்கியுள்ள சம உரிமை, பேச்சுரிமை, வாழும் உரிமை பங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவர்களுக்கு எதிராக கடுமையான குரல் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.
பின்னர், பல்கலையில் பட்டம் பயின்ற 1886 மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், துனை வேந்தர் ஜேம்ஸ் மற்றும் அறங்காவலர் ஸ்டெல்லா தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.