கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறையில் வெடி பொருட்கள் இருந்ததால், அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அடுத்துள்ள கோவைபுதூரில் ஏராளமான மாணவர்கள் கல்லூரி அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இதில், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பொறியியல் மாணவர்களும் இவ்வாறான வீடுகளில் தங்கியிருந்த நிலையில், அவர்களது வீட்டிற்கு புதிது புதிதாக சில நபர்கள் வந்து சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதீ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு விசாரணைக்காக காவல்துறையினர் வந்த நிலையில்,காவல்துறையினரைக் கண்ட நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்ட போது, பெரிய அளவிலான பட்டாசுகள் ஒரு பையில் நிறைய இருப்பதும், அவற்றின் மேலே வெடி பொருட்கள் போல கயிற்றில் சுற்றி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் அறையில் தங்கி இருந்த 3 பொறியியல் மாணவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பொருட்கள் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறையினரிடம் சோதனைக்காக அனுப்பப்பட்டதை தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.