கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் முக்கிய அணையாக உள்ளது. இந்த அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்திற்கும் வழங்கப்படுகிறது. இது தவிர, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்தாண்டு பருவமழை கரிவர பொழியாத நிலையில் கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான அணைகள் வறண்டன.
இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் ஆழியாறு அணை, சோலையார் அணை, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வர துவங்கியுள்ளது.
அணைகளில் நீர்மட்டம் விபரம்:-
சோலையார் அணையின் நீர்மட்டம் 72.74/160 அடி. தற்போது, 4139.70 கன அடி நீர்வரத்து உள்ளது. சோலையாறு அணை நிர் பிடிப்பு பகுதியில் 102 மி.மீ மழை அளவு உள்ளது.
பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 8.30/72 அடி ஆகும். தற்போது, 1470 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 3 கன அடி நிர் வெளியேற்றப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 108 மி.மீ மழை அளவு உள்ளது.
69.60/120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது, 319 கன அடி நீர்வரத்து உள்ளது. இங்கிருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 28.6 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம்- உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 14.39/60 அடி ஆகும். இங்கிருந்து தற்போது, 27 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அமராவதி அணையின் மொத்த நீர்மட்டம் 40.62/90 அடி ஆகும். இங்கு நீர்வரத்து 1657 கன அடி ஆக உள்ளது. அமராவதி அணையில் இருந்து 8 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவக்கமாக 99 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது. வால்பாறைக்கு உட்பட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை விபரம் பின்வருமாறு:-
அப்பர் நீராறு - 125 மில்லி மீட்டர், லோயர் நீராறு - 107 மில்லி மீட்டர், காடம்பாறை - 21 மில்லி மீட்டர், சர்க்கார்பதி - 57 மில்லி மீட்டர், வேட்டைக்காரன் புதூர் - 32.8 மில்லி மீட்டர், மணக்கடவு - 23.2 மில்லி மீட்டர், தூணக்கடவு - 68 மில்லி மீட்டர், பெருவாரிபள்ளம் - 155 மில்லி மீட்டர், அப்பர் ஆழியார் - 5 மில்லி மீட்டர்.