நகைக்கடைகளில் தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்காக நகை சீட்டு என்ற சிறு சேமிப்பு திட்டங்கள் நடத்தப்படுகிறது. இதை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு கடைக்கும் செய்கூலி, சேதாரம் வேறுபடுவதை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்றும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவையில் பல நகைக்கடைகள் மற்றும் வடிவமைப்பு தொழிலகங்கள் செயல்பட்டு வருகிறது. பல சிறு சேமிப்பு திட்டங்களை அறிவிக்கும் நகைக்கடைகளில் மக்கள் தங்களால் முடிந்த மாதாந்திர தவணை தொகையை செலுத்தி வருகின்றனர். சூழ்நிலை காரணமாக சில நேரத்தில் தவணை தொகையை செலுத்த முடியாத நிர்பந்தம் ஏற்டுகிறது.
இச்சூழலை பயன்படுத்திக்கொள்ளும் நகைக்கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கட்டிய தவணை தொகையினை பல காரணங்கள் கூறி திருப்பி கொடுக்க மறுக்கின்றனர். மேலும், செய்கூலி, சேதாரம் என மக்களிடம் அதிக பணத்தை வசூலிக்கின்றனர்.
தங்க நகைகள் பல ஆண்டுகளாக மக்களின் பாரம்பரிய காலாச்சார வாழ்வியலோடு சேர்ந்தே வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பாக நூதனமான முறையில் மக்களின் பணத்தை சேமிப்பு என்ற முறையில் கொள்ளையடிக்கும் நகைக்கடைகளை கண்காணிக்க ஆய்வுக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நகை விற்பனையை முறைப்படுத்த வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.