ஸ்மார்ட் கார்டுகளில் நிலவி வரும் பெயர் குழப்பங்களை நீக்க வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 6 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 972 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பொதுவினியோக திட்டத்தை முழு கணினிமயமாக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று கோவையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
தமிழக அரசின் முன்னோடி திட்டமான தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள ஒரு கோடியே 91 லட்சம் ரேசன் கார்டுகளில் ஒரு கோடியே 32 லட்சம் கார்டுதாரர்கள் தங்களது ஆதார் எண்களை முழுமையாக பதிவு செய்துள்ளனர். 52 லட்சம் பேர் பகுதியான தகவல்களை பதிவிட்டுள்ளனர். தகவல்களை பதிவிடாத ஒரு லட்சத்து 96 ஆயிரம் கார்டுதாரர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஆதார் கார்ட்டில் இருந்து டிரான்ஸ்லேசன் செய்யும் போது ஏற்படும் குழப்பங்களால் சில ஸ்மார்ட் கார்டுகளில் பெயர்கள் மாறிவருவதாக புகார்கள் எழுகின்றன. இதனை களைய வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்சனைகள் சீர்செய்யப்படும்.
கோவை வட்டத்தில் மொத்தமுள்ள 9 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகளில் 3 லட்சத்து 52 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் அரிசி கடத்தலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் 972 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.