வெள்ளலூர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில்,
உக்கடம் பெரிய குளத்திற்கு தண்ணீர் திருப்பும் சட்டர், பாலம் கட்டுவதற்காக உடைக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் இனியும் சட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபடலாம் அல்லது அதிக நீர் வாய்க்கால் குளத்தை உடைக்க நேரிடும்.
மேலும், வெள்ளலூர் வாய்க்கால் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரிடம் பேசி பத்து நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், உக்கடம் வாய்க்கால் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார் என தெரிவித்தனர்.
முன்னதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.