கோவையில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: தனிப்படை போலீசார் கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை

தொண்டாமுத்தூரரை அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் இளம் பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஒரு தனிப்படை போலீசார் கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் இளம் பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டின் முன் பெட்ரோல் தீப்பற்றி எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் குற்ற எண் 84/2026-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ரவுடி கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்ற மாரியப்பன் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறிய நிலையில், கார்த்தி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கடந்த 2024-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த இளம்பெண் கார்த்தியுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, தனது கூட்டாளிகளுடன் இருசக்கர வாகனங்களில் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து, எரியக்கூடிய திரவம் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை வீட்டின் நுழைவாயிலை நோக்கி வீசி அங்கிருந்து தப்பிசென்றார்.



இதையடுத்து கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய அமைக்கப்பட்ட 3 தனிப்படைகளில் ஒரு குழுவினர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கு பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பியோடிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் நோக்கில் பல்வேறு மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...