வால்பாறை சுட்டுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் சுட்டுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில், முடீசில் உள்ள ஆறு மற்றும் முடீஸ் அருகே உள்ள தெப்பக்குளத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பலத்த சூறாவளிக்காற்று வீசியதில் முடீஸ் பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையம் அருகாமையில் சாலையோரம் இருந்த சுமார் 80 வருடம் பழமைவாய்ந்த மரம் வேருடன் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. தொடர்ந்து, அந்த மரம் சாலையில் விழுந்த நிலையில், அதன் அருகில் இருந்த இரண்டு மின் கம்பங்களும் காவல் நிலையத்தின் மீது விழுந்தது. அதிர்ஸ்டவசமாக இதில் எவ்வித உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், எஸ்டேட் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் இணைந்து அந்த மரத்தினை அகற்றினர்.