தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 25) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்டு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை மாவட்டத்தில் காய்கறி மார்கெட், பழக்கடை, நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை உள்ளிட்டு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவை டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உட்பட நகர் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளது.

முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள், லாரிகள் இயங்காத காரணத்தால் கோவை மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரையரங்குகள் மூடப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனிடையே, கோவையில் அரசுப் பேருந்துகள் மட்டும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் பணிக்குச் செல்லும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.