காந்திபுரம் பகுதியில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. சுமார், ரூ.162 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் நஞ்சப்பா சாலையையும், சத்தி சாலையையும் இணைக்கும் விதமாக 1752 மீ நீளம் மற்றும் 26 மீ அகலத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 55 தூண்கள் அமைக்கப்பட்டன. அதில், 53 தூண்களின் மீது காண்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. மேலும், 2 தூண்கள் ஜி.பி. சிக்னல் பகுதியில் உள்ளன. இப்பகுதியில் இரண்டடுக்கு ரவுண்டான பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பணிகள் காரணமாக காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு வழியாக சென்று 100 அடி சாலையை அடைந்து மீண்டும் சத்தி சாலையை அடைகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பால பணிகள் முடிவடையும் என்று கூறப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தல் காரணங்களால் தற்காலிகமாக இந்த பணி நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது. மெத்தனமாக நடைபெறும் இந்த பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. தற்போது இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மின் கேபிள் பதிக்கும் பணி
100 அடி சாலை பகுதியில் உள்ள உயர் கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்த கோபுரங்களால் இரண்டடுக்கு பாலம் கட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இதனால், உயர் மின் அழுத்த கேபிள்களை நிலத்தடியில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.13 கோடி செலவில் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் வாங்கப்பட்டன. தொடர்ந்து அவை நிலத்தடியில் பதிக்கப்பட்டன.
அடிக்கடி விபத்து
மேம்பால பணிகளால் ஜி.பி. சிக்னல் பகுதியில் உள்ள சிக்னல்கள் மற்றும் சாலை விளக்குகள் அகற்றப்பட்டுள்ளது. சாலை விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பதட்டத்துடன் வகானத்தை இயக்குகின்றனர். அதனால், அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த விபத்துக்களால் இதுவரை உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இருந்த போதும் பெரிய அளவில் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பதுவும்,பணிகளை விரைந்து முடிப்பதும் மிக அவசியம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.