கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவந்த மூன்று வயதுடைய குட்டியானை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீட்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில், 70 சதவிகிதம் குணமடைந்த குட்டியானை கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று பில்லூர் வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் காரமடை அருகேயுள்ள ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அந்த குட்டி யானை மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. மேலும், ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் இருந்த பலாமரத்தில் பழம் உண்பதற்காக அந்த யானை முயற்சித்துள்ளது. இதனால் அச்சமடைந்த அங்கிருந்த ஒரு குடியிருப்பு வாசிகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் புகார் அளித்தநிலையில், கால்நடை மருத்துவர் என்.எஸ்.மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டியானையை மையக்க ஊசி செலுத்தி கடந்த ஞாயிறன்று பிடித்தனர்.
தொடர்ந்து, டாப்சிலிப் ஆனைமலை புலிகள் சரணாலயம் வரகலியார் முகாமிற்கு அந்த யானை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாவட்ட வனத்துறை அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் கூறுகையில், தற்போது கோவை வனப்பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள யானை மிகவும் குட்டி. வனத்துறையினரால் சிகிச்சைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதை கும்கி யானையாக பயிற்சியளிக்கலாமா அல்லது வனப்பகுதியிலேயே விடலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என தெரிவித்தார்.